புதுடெல்லி: ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் அவரை கொன்ற கொடூர காதலனின் குரல் மாதிரியை சிபிஐ இன்று சேகரித்தது. இவை பழைய ஆடியோவின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. மும்பையை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா வாக்கர் அவரது காதலன் அப்தாப் பூனாவாலா என்பவனால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள அப்தாப் பூனாவாலாவிடம், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சிபிஐ தலைமையகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக அப்தாப் பூனாவாலா ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘அப்தாப் பூனாவாலாவின் ஆடியோ கிளிப்புகள் கிடைத்துள்ளன. அவை ஷ்ரத்தா வாக்கர் மற்றும் சிலரிடம் பேசப்பட்டவை. அவரிடம் சண்டையிட்ட பதிவுகளும் உள்ளன. அதனால் அவரது குரல் மாதிரி சோதனை நடத்தப்படுகிறது. பழைய ஆடியோ கிளிப்புடன், தற்போதைய அவரது குரல் மாதிரியுடன் பொருந்தி வருகிறதா? என்பது குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இதன்மூலம் கொடூரமான கொலையின் பின்னணியில் உள்ள நோக்கத்தை கண்டறிய முடியும். மேலும் அவரிடம் போதைப்பொருள் பயன்பாடு, மூளை மேப்பிங், பாலிகிராஃப் போன்ற சோதனைகளும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.